மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1927 கன அடியாக சரிந்தது
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் நேற்று விநாடிக்கு 1994 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இன்று நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 1927 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணை சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.
இந்த நிலையில் குடிநீருக்கான தேவை அதிகரித்ததால் நேற்று மாலை 6 மணி முதல் விநாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி அளவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 97.89 அடியாக நீடித்தது.