செய்திகள்
உடுமலை பகுதியில் விவசாயிகள் தக்காளி பழங்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளதை படத்தில் காணலாம்.

உடுமலையில் தக்காளி பழங்களை இலவசமாக வழங்கும் விவசாயிகள்

Published On 2021-05-13 08:21 GMT   |   Update On 2021-05-13 11:56 GMT
தக்காளிக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் உற்பத்திக்கு வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிக அளவு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.50-க்கும் குறைவாகவே விற்பனையாகி வருகிறது. கொரோனா ஊரடங்கின் காரணமாக வெளியூர்களுக்கு தக்காளி கொண்டு செல்வதில் உள்ள சிரமம், மதியம் 12 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகள் வைக்க அனுமதி இவைகளே இதற்கு காரணம். மேலும் உடுமலை மொத்த விற்பனை சந்தைக்கு வெளியூர் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் தக்காளியை சந்தைக்கு கொண்டு வருவதற்கான வாகன செலவு கூட கட்டுப்படியாகாமல் உள்ளது. இதனால் பல விவசாயிகள் தக்காளி பழங்களை செடிகளிலேயே பறிக்காமல் விட்டுள்ளதை காணமுடிகிறது. யார் வந்து கேட்டாலும் இலவசமாக பறித்து கொள்ள அனுமதிக்கிறார்கள்.

ஒரு சில விவசாயிகள் தக்காளி செடிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டு மாற்று சாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள். தக்காளிக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் உற்பத்திக்கு வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Tags:    

Similar News