செய்திகள்
அரசு ஆஸ்பத்திரி குப்பை தொட்டியில் கிடந்த ஆண் குழந்தை உடலை படத்தில் காணலாம்.

அரசு ஆஸ்பத்திரி அருகே குப்பை தொட்டியில் கிடந்த ஆண் குழந்தை உடல்

Published On 2021-04-13 04:09 GMT   |   Update On 2021-04-13 04:09 GMT
அரசு ஆஸ்பத்திரி அருகே குப்பை தொட்டியில் கிடந்த ஆண் குழந்தையின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு உளுந்தூர்பேட்டை, எலவநாசூர்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் ஏராளமானோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எனவே, அரசு ஆஸ்பத்திரியில் எப்போதும் ஆட்கள் நடமாட்டத்துடனும், பரபரப்புடனும் காணப்படும். இந்த ஆஸ்பத்திரி அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை ஒன்று பிணமாக கிடந்தது.

அந்த குழந்தை துணிப்பையில் ரத்தக்கறையுடன் பிறந்த சில நிமிடங்களில் கொண்டு வந்து போட்டுள்ளனர். இதனை பார்த்த ஆஸ்பத்திரிக்கு வந்த பொதுமக்கள் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

என்றாலும் பச்சிளம் ஆண் குழந்தையின் உடலை வீசி சென்ற கொடூர தாய் யார்? தவறான வழியில் இந்த குழந்தை பிறந்ததால் இங்கு வீசி சென்றாரா? என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து அதன் மூலம் குழந்தை உடலை வீசி சென்ற கொடூரத்தாயை போலீசார் தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News