செய்திகள்
கோவிலில் சீமான் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தகாட்சி.

மகனின் காதணி விழா- கோவிலில் 108 கிடாய் வெட்டி விருந்து வைத்த சீமான்

Published On 2021-02-16 02:38 GMT   |   Update On 2021-02-16 02:38 GMT
மகனின் காதணி விழாவுக்காக கோவிலில் 108 கிடாய் வெட்டி சீமான் விருந்து வைத்தார்.
காளையார்கோவில்:

காதணி விழா சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடிக்கரை கிராமத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் நாம் தமிழர் கட்சி் ஒருங்கிணைப்பாளர் சீமான் மகன் பிரபாகரனுக்கு காதணி விழா நடந்தது. இதில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது சீமான் கூறியதாவது:-

எனது மகன் காதணி விழாவிற்காகவும், குலதெய்வ வழிபாட்டிற்காகவும் இங்கு வந்தோம். 108 கிடாய் வெட்டி விருந்து வைத்து விழா நடத்தி மகிழ்ச்சியோடு நிற்கிறேன்.

விவசாயிகள் கடனாளி ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நெல் வாங்கி விற்பவனும், தவிடாக்கியவனும் கூட பணக்காரர்களாக ஆகி இருக்கிறார்கள். விளைவித்தவன் கடனாளி ஆக காரணம் என்ன?. ஒவ்வொரு முறையும் விவசாய கடனை தள்ளுபடி செய்தாலும் விவசாயி கடனாளியாகவே ஆகிறான். அடிப்படையில் பிரச்சினை இருக்கிறது. உழவன் உற்பத்தி செய்த பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயிக்க முடியாத நிலையை மாற்றவேண்டும்.

பிரதமர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தது வெறும் வெற்று அறிவிப்பு தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை பணியை தொடங்கினார்கள் வந்ததா?. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் என்ன செய்தார்கள். ஒரு வெற்று அறிவிப்பு, பசப்பு வார்த்தைகள் தான் கூறப்பட்டு உள்ளது. நிதி இருக்கிறது என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியை ஏன் நிறுத்த வேண்டும்.

மத்திய அரசு செய்வதெல்லாம் ஒரு ஏமாற்று வேலை. தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் வெற்றி நடைபோடும். பெட்ரோல், டீசல் விலை குறித்து சுப்பிரமணியசாமி சொன்னதுபோல ராவணன் நாடு, சீதா நாடுகளில் எல்லாம் விலை குறைவா இருக்கு. ராமன் நாட்டில் விலை ரொம்ப கூடுதலாக இருக்கிறது. எல்லாம் தனியார்மயம் ஆக்கியதால் அவர்களுக்கு நினைத்த நேரம் விலையேற்றுவது வாடிக்கையாகி விட்டது.

கச்சா விலை குறைந்தாலும் பெட்ரோல்-டீசல் விலை உயர்கிறது. இதை மாற்ற வேண்டும். முடிக்கரையில் தொல்லியல் ஆய்வு நடக்க உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்த மரம், செடி கொடிகள் மக்கி கரியானதும் இடைவெளியில் புகுந்த காற்று மீத்தேனாகவும் பூமிக்குள் மறைந்துள்ளது. அதுபோலதான் கீழடியும். தொல்லியல் ஆய்வுகளை வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பிரபாகரன் கட்டுமானங்கள் நிறுவனர் பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News