செய்திகள்
கொலை

கோவில்பட்டியில் கணவனை வெட்டிக்கொன்ற பெண்

Published On 2021-01-23 07:32 GMT   |   Update On 2021-01-23 07:32 GMT
கோவில்பட்டியில் 2-வது திருமணத்திற்கு முயன்ற கணவனை மனைவியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனியை சேர்ந்தவர் பிரபு(வயது 38). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி உமா மகேஷ்வரி(30) என்ற மனைவியும், ஆதிசிவன்(7), காவியாஸ்ரீ (4) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். பிரபு மது அருந்தி விட்டு அடிக்கடி உமா மகேஷ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

நேற்று நள்ளிரவிலும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த பிரபு, உமா மகேஷ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உமா மகேஷ்வரி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரபுவை வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த பிரபு வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து அருகில் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் உமா மகேஷ்வரி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சென்று சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசசோதனைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக உமா மகேஷ்வரியை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

பிரபுவிற்கு வேறு பெண் ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே பிரச்சனை முற்றிய நிலையில், தான் தொடர்பு வைத்துள்ள பெண் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும், விரைவில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பிரபு தெரிவித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த உமா மகேஷ்வரி கணவரது காலை பிடித்து கெஞ்சி கேட்டுள்ளார். ஆனால் பிரபு எதையும் கண்டுகொள்ளாமல் திருமணம் செய்வேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. நேற்றிரவும் இந்த பிரச்சனை மீண்டும் நடந்துள்ளது.

இதனால் மன வேதனையில் இருந்த உமா மகேஷ்வரி அருகில் இருந்த அறையில் குழந்தைகளை தூங்க வைத்து விட்டு, தூங்காமல் இருந்துள்ளார். இரவு நேரம் செல்ல, செல்ல தனது வாழ்வு பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இருந்த உமா மகேஷ்வரி தூங்கி கொண்டு இருந்த தனது கணவனை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 2-வது திருமணத்திற்கு முயன்ற கணவனை மனைவியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News