செய்திகள்
சகுந்தலா

பெண் தீக்குளித்து தற்கொலை: உறவினர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

Published On 2020-11-27 21:01 GMT   |   Update On 2020-11-27 21:01 GMT
நெல்லை அருகே போலீசார் முன்னிலையில் பெண் தீக்குளித்து இறந்தது தொடர்பாக உறவினர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் விசாரணை நடத்தினார்.
பேட்டை:

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி சத்யா நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ் மகன் பிரதீப் (வயது 20). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சுத்தமல்லி போலீசார் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்தனர். பின்னர் களவு பொருட்களை மீட்பதற்காக போலீசார், பிரதீப்பை அவரது வீட்டுக்கு அதிகாலையில் அழைத்து சென்றனர்.

தொடர்ந்து பிரதீப்பின் அண்ணன் பிரசாந்த் (22) என்பவரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதற்கு அவர்களுடைய தாயார் சகுந்தலா (45) எதிர்ப்பு தெரிவித்து மூத்த மகனை விடுவிக்குமாறு கெஞ்சினார்.

தொடர்ந்து போலீசாரின் நடவடிக்கையால் விரக்தி அடைந்த சகுந்தலா, போலீசார் முன்னிலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தாயாருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக பிரதீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் சுத்தமல்லி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து சகுந்தலா தற்கொலை மற்றும் அதில் போலீசாரின் பின்னணி இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரை விசாரணை அதிகாரியாக நியமித்தார். இதையடுத்து சகுந்தலா வீட்டுக்கு சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், அந்த பகுதியில் உள்ள உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் நேற்று சுத்தமல்லி சத்யா நகருக்கு 2-வது நாளாக சென்று மீண்டும் விசாரணையை தொடங்கினார்.

சகுந்தலாவின் தாய் லட்சுமி, தம்பி பாலா, மகன்கள் பிரதீப், பிரசாந்த் மற்றும் உறவினர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். இதற்கிடையே சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News