செய்திகள்
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாண்டிலீனா மலர்களை கொண்டு மான் உருவத்தை பூங்கா நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர்.

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2020-11-01 05:21 GMT   |   Update On 2020-11-01 05:21 GMT
வார விடுமுறை நாளான நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வாறு வருபவர்களை மகிழ்விக்கும் வகையில் கொடைக்கானலில் பகல் நேரத்தில் இதமான சூழலும், இரவில் குளிரான சூழலும் நிலவி வருகிறது.
கொடைக்கானல்:

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா புகழ்பெற்றதாகும். இந்த பூங்காவை பார்வையிடுவதற்காகவே ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருவர். ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த பூங்காவில் பூக்கள் அதிக அளவில் பூத்துக்குலுங்கும். பின்னர் பூக்கள் பூப்பது குறைந்துவிடும். இந்த நிலையில் பூக்களால் ஆன நிரந்தர உருவங்களை அமைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தற்போது பூங்கா வளாகத்தில் டால்பின் மீன்கள், மான் உள்ளிட்டவற்றின் உருவங்களை பூக்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் புத்தர் சிலையை மிக நேர்த்தியாக வடிவமைத்த பூங்கா நிர்வாகத்தினர் தற்போது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாண்டிலீனா மலர்களை கொண்டு மான் உருவத்தை அமைத்துள்ளனர். இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இதனிடையே வார விடுமுறை நாளான நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வாறு வருபவர்களை மகிழ்விக்கும் வகையில் கொடைக்கானலில் பகல் நேரத்தில் இதமான சூழலும், இரவில் குளிரான சூழலும் நிலவி வருகிறது. மேலும் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்வையிட்டும், ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News