செய்திகள்
மதவாத, பயங்கரவாத சக்திகளை திடமாக எதிர்க்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
மதவாதம் மற்றும் பயங்கரவாத சக்திகளை திடமாக எதிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை:
புதுச்சேரி முதல்மந்திரி வீட்டில் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்க நீதிபதி கிருபாகரன் மறுப்பு தெரிவித்தார்.
இந்த வழக்கு விராசணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன்,’ அரசியல் சாசனத்தில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் மொழியை இருட்டடிப்பு செய்யப்படுவதாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது.
குறிப்பிட்ட சில மொழிகளை முன்னுரிமை அளிப்பதாகவோ மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது. மொழி பேரினவாதத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. இது போன்ற சக்திகள் தலையெடுக்கவும்
அனுமதிக்க கூடாது.
மதவாத சக்திகளையும், பயங்கரவாத சக்திகளையும் திடமாக எதிர்க்க வேண்டும். 1967 ஆம் ஆண்டுக்கு பின் தமிழகத்தில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சிக்கு தமிழ் மொழியே காரணம்’ என்றார்.
மொழி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மற்றொரு நீதிபதியான ஹேமலதா,’ஒரு மொழியை படிக்க வேண்டும் என்பது தனி நபர்களின் விருப்பம்’ என தெரிவித்துள்ளார்.