செய்திகள்
கொலை

குடும்ப தகராறில் மனைவியின் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை- கணவரும் தீக்குளித்து தற்கொலை

Published On 2020-08-26 10:05 GMT   |   Update On 2020-08-26 10:05 GMT
கும்பகோணத்தில் இன்று காலை குடும்ப தகராறு காரணமாக மனைவியின் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தோப்புதுறையை சேர்ந்தவர் விஜயன் (வயது 55). இவர் கும்பகோணம் இந்திராசாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சபிதா (45).

இவர்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் இவர்கள் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்தனர். இதன் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் விஜயன் ஆத்திரமடைந்து சபிதாவை தாக்கினார். இதில் அவர் கீழே விழுந்தபோது அம்மிகல்லை எடுத்து சபிதாவின் தலைமேல் போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சபிதா பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து தப்பி ஓடினாலும் எப்படியும் போலீசார் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்ற பயத்தில் இருந்த விஜயன் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் விஜயனும் உடல் கருகி இறந்தார்.

உடல் கருகி கணவனும், ரத்த வெள்ளத்தில் சபிதாவும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News