செய்திகள்
மரணம்

சேதுபாவாசத்திரம் அருகே இறப்பிலும் இணை பிரியாத முதிய தம்பதி

Published On 2020-05-25 04:22 GMT   |   Update On 2020-05-25 04:22 GMT
சேதுபாவாசத்திரம் அருகே முதிய தம்பதி இறப்பிலும் இணை பிரியாமல் ஒரே நாளில் இறந்துள்ளனர். இது கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சேதுபாவாசத்திரம்:

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள விளங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ்.ரெத்தினம்(வயது95). இவர் ஆன்மிக சொற்பொழிவாளர். இவருடைய மனைவி மங்களம்(90). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள். ஒரு மகள் இறந்து விட்டார். மகன் முருகானந்தம் (54) மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

ரெத்தினம், தனது மனைவி மற்றும் மகனின் குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வந்தார். வயது முதிர்ச்சி காரணமாக ரெத்தினம் நேற்று காலை இறந்தார்.

இதையடுத்து அவருடைய உடலை சொந்த ஊரில் தகனம் செய்ய முருகானந்தம் விரும்பினார். அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய உடல் விளங்குளத்துக்கு எடுத்து வரப்பட்டது. ஆம்புலன்சில் ரெத்தினத்தின் மனைவி மங்களம், மகன் முருகானந்தம் மற்றும் குடும்பத்தினரும் வந்தனர்.

விளங்குளத்தில் உள்ள வீட்டில் ரெத்தினத்தின் உடல் இறக்கி வைக்கப்பட்டது. அப்போது பல ஆண்டு காலம் இணக்கத்துடன் வாழ்ந்த கணவர் இறந்து விட்டதை நினைத்து மங்களம் கதறி அழுதபடி கணவரின் உடல் அருகிலேயே இருந்தார். உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்ட அரை மணிநேரத்தில் மங்களத்தின் உயிரும் பிரிந்தது.

கணவருடைய உடல் அருகிலேயே மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் எழுப்பியபோது அவர் கணவருடன் விண்ணுலகிற்கு பயணமாகி விட்டது தெரியவந்தது. ஒரே நாளில் வயதில் மூத்த தம்பதி அடுத்தடுத்து இறந்தது கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வாழ்வில் மட்டுமின்றி சாவிலும் கைகோர்த்த தம்பதியை நினைத்து உறவினர்கள் கதறி அழுதனர். இறப்பிலும் இணை பிரியாத இருவரின் உடல்களுக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, ஒரே தகன மேடையில் வைத்து உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
Tags:    

Similar News