செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கச்சத்தீவை மீட்பது தான்- ஐகோர்ட்டில், தமிழக அரசு மனு

Published On 2020-03-16 10:30 GMT   |   Update On 2020-03-16 10:30 GMT
தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்று சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை:

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்க கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குனர் சமீரன் இன்று நேரில் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு திடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 10-ந்தேதி நிலவரப்படி, 3 தமிழக மீனவர்கள் மட்டுமே இலங்கை சிறையில் உள்ளதாகவும், இலங்கையில் 2009-ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு, தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, கைது நடவடிக்கைகள் குறைந்துள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு 250 ரூபாய் வழங்கப்படுவதாகவும், 1,750 மீனவ குடும்பங்களுக்கு ஒரு கோடியே 77 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன் பிடி திட்டத்தை அமல்படுத்த 286 கோடி ரூபாயை, மத்திய, மாநில அரசுகள் விடுவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 750 படகுகள் கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறிக்கையை ஆய்வு செய்து மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த திட்டங்களை அமல்படுத்தி அதில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

Similar News