செய்திகள்
குரூப்-1 முறைகேடு வழக்கு பிப்ரவரி 12-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்- ஐகோர்ட்டு
குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை வருகிற பிப்ரவரி 12-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்திய குரூப்-4 தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பதிவான வழக்கில் பலரை சி.பி. சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். பலரை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்மையில் டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் நடத்திய குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இன்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் முன்பு வக்கீல்கள் புருஷோத்தமன், பெருமாள் ஆகியோர் ஆஜராகி டி.என்.பி. எஸ்.சி., குரூப்-1 தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்தது. தேர்வுக்கு பயன் படுத்தப்படும் விடைத்தாள் வெளியாகியது குறித்து ஸ்வப்னா என்ற திருநங்கை தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. பல மாதங்களாக இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப் படாமல் உள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், குரூப்-1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை வருகிற பிப்ரவரி 12-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.