செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட சசிக்குமார்

திருச்சியில் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு வாலிபர் தற்கொலை

Published On 2020-01-17 10:23 GMT   |   Update On 2020-01-17 10:23 GMT
திருச்சியில் இன்று காலை துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி ஏர்போர்ட் சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. மாநகராட்சியில் ஓட்டுனராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் சசிகுமார் (வயது 31).

மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கல்லூரி நாட்களிலேயே துப்பாக்கி சுடுவதில் பல்வேறு பதக்கங்கள் பெற்றிருந்தார். படித்து முடித்ததும் துப்பாக்கி சுடும் பயிற்சி அகாடமி நடத்த முடிவு செய்தார். இதற்கு அவரது பெற்றோரும் சம்மதித்தனர்.

இதையடுத்து தமிழக அரசு மற்றும் காவல் துறை அனுமதி மற்றும் அங்கீகாரத்துடன் தனது வீட்டின் ஒரு பகுதியிலேயே பார்ன் ஷூட்டிங் அகாடமி என்ற பெயரில் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்தார். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதற்காக பிரத்யேகமான துப்பாக்கிகளையும் அவர் வாங்கி வைத்திருந்தார்.

இதற்கிடையே அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆனால் சசிகுமார் தொடர்ந்து மறுத்து வந்தார். இதுதொடர்பாக பெற்றோருக்கும், சசிக்குமாருக்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் திருமண வி‌ஷயம் தொடர்பாக மீண்டும் அவர் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென்று தான் நடத்தி வரும் பயிற்சி அகாடமி அறைக்கு சென்றார்.

பின்னர் அந்த தனி அறையை உட்புறமாக பூட்டிக்கொண்ட சசிக்குமார் நாட்டுத் துப்பாக்கியால் தனது நெற்றியில் சுட்டுக் கொண்டார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடினார். இதற்கிடையே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பூட்டியிருந்த அறையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் அசைவற்று கிடந்தார்.

உடனே அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சசிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் பிடிக்காததால் சசிக்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்று போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News