செய்திகள்
கொலை

திருச்செந்தூரில் பீர்பாட்டிலால் குத்தி தொழிலாளி படுகொலை

Published On 2020-01-16 12:34 GMT   |   Update On 2020-01-16 12:34 GMT
திருச்செந்தூரில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுவாங்கும் தகராறில் பீர்பாட்டிலால் குத்தி தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 48), கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். லட்சுமணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று காலையிலேயே திருச்செந்தூர்-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள அடைக்கலாபுரம் மெயின்ரோட்டில் இருக்கும் மதுக்கடைக்கு சென்றுள்ளார். பொங்கல் பண்டிகை என்பதால் கடையின் முன்பு ஏராளமான கூட்டம் இருந்தது.

கடை திறந்தவுடன் மது வாங்குவதற்காக அங்கிருந்தவர்கள் அனைவரும் திரண்டனர். கடை திறந்ததும் அவர்கள் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு போட்டி போட்டு மது வாங்கி சென்றுள்ளனர். இந்நிலையில் லட்சுமணன் மது வாங்கிக் கொண்டிருக்கும்போது காயல்பட்டினம் அருகே உள்ள ஓடைக்கரை மெயின்ரோட்டை சேர்ந்த பாஸ்கர்(50) என்பவரும் மது வாங்க வந்துள்ளார்.

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பாஸ்கர் தான் தான் முதலில் மது வாங்குவேன் என்று கூறி லட்சுமணனிடம் கூறி சண்டையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றவே பாஸ்கர் அங்கு கிடந்த பீர்பாட்டிலால் லட்சுமணனின் கழுத்தில் குத்தினார். உடனே அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மதுக்கடை ஊழியர் அய்யப்பன் திருச்செந்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் லட்சுமணனின் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாஸ்கரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுக்கடையில் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மதுக்கடை உடனடியாக அடைக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்த திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஏராளமான மதுக்கடைகள் சில மணி நேரம் அடைக்கப்பட்டன. மேலும் அனைத்து மதுக்கடைகள் முன்பும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News