செய்திகள்
சேலத்தில் சிபிஐ சோதனை நடந்த வருமான வரித்துறை அதிகாரி குமாரின் வீடு

சேலம், ஓசூர் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை

Published On 2019-12-31 07:33 GMT   |   Update On 2019-12-31 07:33 GMT
சேலம், ஓசூர் உள்பட 5 இடங்களில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

பெங்களூரு சிவாஜி நகரில் ஐ.எம்.ஏ. நிதி நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தை முகமதுமன்சூர்கான் என்பவர் நடத்தினார்.

இங்கு முதலீடு செய்தால் வட்டியுடன் சேர்த்து அந்த பணத்திற்குரிய நகைகளை தருவதாக கூறி இருந்தார். அவரது பேச்சை நம்பி தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த 76 ஆயிரம் பேர் முதலீடு செய்திருந்தனர். ஆனால் யாருக்கும் பணமோ, தங்கமோ திருப்பி தரப்படவில்லை. கிட்டத்தட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு இந்த நிறுவன அதிபர் முகமது மன்சூர்கான் துபாய் தப்பி ஓடினார்.

இந்த மோசடி வழக்கை முதலில் கர்நாடக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் துபாயில் இருந்து திரும்பிய முகமது மன்சூர்கான் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய முன்னாள் மந்திரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகியோரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள்.

கார்வார், பெங்களூரு, சேலம், ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள 5 பேரின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இன்று 2-வது நாளாக இந்த சோதனை நடந்து வருகிறது.

பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் புலனாய்வு பிரிவு துணை கமி‌ஷனராக பணியாற்றும் சவுரப்நாயக், சொத்து மதிப்பீடு பிரிவில் உதவி கமி‌ஷனராக பணி யாற்றும் சேலத்தை சேர்ந்த குமார் மற்றும் புரோக்கர்களாக செயல்பட்ட ஆசிஸ் ஜெயின், கிரண்பமேடி, கைசல்பாட்சா ஆகிய 5 பேரின் வீடுகளில் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். மொத்தம் 8 வீடுகளில் இந்த சோதனை நடந்தது.

சேலம் அழகாபுரம் பெரியசாமி நகர் 6-வது கிராசில் உள்ள வருமான வரித்துறை உதவி கமி‌ஷனர் குமார் வீட்டில் நேற்று சிபி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

Tags:    

Similar News