சேலத்தில் வெங்காய குடோன்களில் போலீசார் சோதனை
சேலம்:
தமிழ்நாட்டில் வெங்காய குடோனில் பதுக்கி வைப்பதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் வகையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. பிரதீப் பிலிப் உத்தரவின் பேரில் எஸ்.பி. சாந்தி மேற்பார்வையில் தமிழகம் முழுவதும் உள்ள குடோன்களில் அதிரடி சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கோவை மண்டல டி.எஸ்.பி. ரவிக்குமார் தலைமையில் சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ், அருண்குமார், ரகுநாத் ஆகியோர் சேலம் லீபஜார், சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வெங்காய குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் வியாபாரிகளிடம் குடோன்களில் எவ்வளவு வெங்காய இருப்பு உள்ளது என்பது குறித்தும், அளவுக்கு அதிகமாக ஏதாவது வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் இருப்பு குறித்த பதிவேடுகளை சரி பார்த்தனர். வெங்காயத்தை குடோன்களில் பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் எச்சரித்தனர்.