செய்திகள்
வயதான தம்பதி துரை- குணசீலி.

பல்லடத்தில் வயதான தம்பதியிடம் 30 பவுன் நகை கொள்ளை

Published On 2019-11-15 04:48 GMT   |   Update On 2019-11-15 04:48 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கத்தியை காட்டி மிரட்டி வயதான தம்பதியிடம் இருந்து 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் துரை (75). இவரது மனைவி குணசீலி (72).

இவர்களுக்கு 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். மகள்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். மகன் திருமணம் ஆகி குடும்பத்துடன் காரணம்பேட்டையில் தனியாக வசித்து வருகிறார்.

துரை-குணசீலி தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் இரவு 10 மணியளவில் இவர்களது வீட்டிற்குள் 3 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் வயதான தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி இரும்பு பெட்டியில் வைத்திருந்த ரூ.18ஆயிரம் ரொக்கம், அதில் இருந்த நகை மற்றும் குணசீலி அணிந்திருந்த செயின்,கம்மல்,வளையல் உள்ளிட்ட 30 பவுன் நகை,செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

பின்னர் வயதான தம்பதி துரை-குணசீலி ஆகியோர் அவர்களது மகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பல்லடம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. முருகவேல், இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்கள் குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News