செய்திகள்
பலியான டிரைவர்

புதுவையில் கார் ஏ.சி. வெடித்து தீ பிடித்ததில் டிரைவர் உடல் கருகி பலி

Published On 2019-11-05 06:33 GMT   |   Update On 2019-11-05 06:33 GMT
புதுவையில் இன்று காலை கார் ஏசி வெடித்து தீ பிடித்ததில் டிரைவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை உழந்தை கீரப்பாளையம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32). டாக்சி டிரைவரான இவர் சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வந்தார்.

இவர் தினமும் சவாரிக்கு சென்ற பிறகு காரை வீட்டின் அருகில் நிறுத்துவது வழக்கம்.

இன்று காலை வழக்கம் போல் முத்துக்குமார் சவாரிக்கு செல்ல காரை ஸ்டார்ட் செய்தார். அப்போது காரில் இருந்த ஏ.சி. திடீரென வெடித்தது.

இதனால் கண் இமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அங்கு இருந்தவர்கள் ஏதோ மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து இருக்கலாம் என கருதி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பிறகே கார் தீப்பிடித்து எரிவதையும், காரில் முத்துக்குமார் சிக்கிக் கொண்டதையும் கண்டனர்.

உடனே அவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். சிலர் கார் கண்ணாடியை உடைத்து முத்துக்குமாரை மீட்டனர். ஆனால், அதற்குள் அவர் கருகி இறந்து விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் முதலியார் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஏ.சி. எந்திரத்தில் கியாஸ் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது.

இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், ஆம்புலன்சு வரவில்லை. இதுபற்றி அறிந்ததும் பாஸ்கர் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு சென்றார். பின்னர் தனியார் ஆம்புலன்சை வரவழைத்து உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்தார்.
Tags:    

Similar News