செய்திகள்
விபத்து

மேலூர் அருகே விபத்து: மொபட்டில் சென்ற பூசாரி, பேத்தியுடன் பலி

Published On 2019-10-19 09:27 GMT   |   Update On 2019-10-19 09:27 GMT
மேலூர் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் பூசாரியும், அவரது பேத்தியும் பலியானார்கள். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரையை அடுத்த மேலூர் அருகேயுள்ள சின்ன சூரக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). அந்தப்பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக இருந்தார்.

இவர் தனது பேரன் கேசவ் (4), பேத்தி சபர்ணா (6) ஆகியோருடன் இன்று தனக்கு சொந்தமான வயலுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

மேலூர்-மதுரை ரோட்டில் 4 வழிச்சாலையில் உள்ள விநாயகபுரம் என்ற இடத்தில் மொபட் சென்று கொண்டிருந்தது.

அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக கார் வந்தது. திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அந்த கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் மொபட்டில் பயணம் செய்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார்.

படுகாயமடைந்த சபர்ணாவை சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சபர்ணா பரிதாபமாக இறந்தாள்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கேசவுக்கு மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விபத்து நடந்ததும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News