செய்திகள்
எழுத்தாளர் மகரிஷி

சேலத்தில் பிரபல எழுத்தாளர் மகரிஷி மரணம்

Published On 2019-09-28 05:10 GMT   |   Update On 2019-09-28 05:10 GMT
சேலத்தில் இன்று காலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார். அவரது உடலுக்கு எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
சேலம்:

சேலம், வின்சென்ட் பகுதியை சேர்ந்தவர் மகரிஷி (வயது 87). பிரபல எழுத்தாளரான இவர், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை இவர் மரணம் அடைந்தார். இவரது உடலுக்கு எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மரணம் அடைந்த எழுத்தாளர் மகரிஷியின் இயற்பெயர் பாலசுப்பிரமணி ஆகும். இவரது புனைப்பெயரில் நாவல்களை எழுதி வந்தார்.

மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர், இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய 6 நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. இதில் வட்டத்துக்குள் சதுரம், பத்ரகாளி, நதியை தேடி வந்த கடல், புவனா ஒரு கேள்விக்குறி போன்ற பிரசித்தி பெற்ற திரைப்படங்களும் அடங்கும்.

இந்த நாவல்களில் வன்மம் எதுவும் இருக்காது. மென்மையான குடும்ப நாவல்கள் எழுதுவதில் பிரசித்தி பெற்றவர்.

மரணமடைந்த மகரிஷிக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஸ்ரீவக்‌ஷ ராமகிருஷ்ணன் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர். பத்மாவதி ஓய்வு பெற்ற நூலகர் ஆவார்.

மகரிஷி தான் எழுதிய நாவல்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவரது எண்ணம் கடைசி வரை ஈடேறவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News