செய்திகள்
மாணவன் உதித் சூர்யா

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்

Published On 2019-09-24 03:02 GMT   |   Update On 2019-09-24 03:02 GMT
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சென்னை மாணவர் சேர்க்கப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தேனி:

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் உதித்சூர்யா (வயது 19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

இந்நிலையில், மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் வந்தது. அதன்பேரில் கல்லூரி முதல்வர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில், கல்லூரி முதல்வர் புகார் செய்தார். அதன்பேரில், மாணவர் உதித்சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் உதித்சூர்யா தனது பெற்றோருடன் தலைமறைவாகி உள்ளார். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த ஆள்மாறாட்டத்தில் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.



இதேபோன்று மேலும் சிலர் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு நேற்று கிடைக்கப்பெற்றது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் இதுவரை சேகரிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டதால், வழக்கு ஆவணங்கள் உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சென்னைக்கு சென்றுள்ள தனிப்படையினரும் திருப்பி அழைக்கப்பட உள்ளனர்’ என்றார்.

Tags:    

Similar News