செய்திகள்
பொதுமக்களால் தாக்கப்பட்ட ஆசிரியர் சரவணன்

பாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம்

Published On 2019-09-19 10:29 GMT   |   Update On 2019-09-19 10:29 GMT
1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே எஸ். உடுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், புதன்சந்தை பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், அருகில் உள்ள அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கடந்த வாரம் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் சரவணனை தாக்கினர்.

இந்த சம்பவத்தில் ஆசிரியரை தாக்கியதாக 10 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 1-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட பள்ளியிலும், கிராமத்திலும் நடத்திய விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் சரவணனை, புதுச்சத்திரம் ஒன்றியம் குத்தமுப்பன்பட்டி தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கை இருக்கும் பட்சத்தில் பணியிடை நீக்கம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது ஓராண்டுக்கு பணியிட மாறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஸ்.உடுப்பம் தொடக்கப்பள்ளியில் மொத்தம் ஒன்பது மாணவர்கள் மட்டுமே உள்ளனர். அதனால் அங்கு தலைமை ஆசிரியராக இருக்கும் ஜெயராஜ் பள்ளியை கவனித்துக் கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News