செய்திகள்
விபத்து

திருமங்கலம் அருகே பள்ளி வேன் மோதி 2 வயது சிறுமி பலி

Published On 2019-09-17 06:14 GMT   |   Update On 2019-09-17 06:14 GMT
திருமங்கலம் அருகே இன்று காலை பள்ளி வேன் மோதி 2 வயது சிறுமி பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட அம்பட்டையன்பட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் மனீஷா (வயது2).

இன்று காலை மணியின் மனைவி தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார். அப்போது சிறுமி மனீஷா சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் தும்பைக் குண்டு பகுதியைச் சேர்ந்த பள்ளி வேன் மாணவ -மாணவிகளை ஏற்றிச் செல்ல அங்கு வந்தது. அந்த வேனின் பின்புறம் சாலையில் சிறுமி மனீஷா நின்றுள்ளார். இதனை கவனிக்காமல் டிரைவர் ஒச்சாத்தேவன் வேனை பின்னால் எடுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வேன் சிறுமி மனீஷா மீது மோதியது. இதில் பின் சக்கரத்தில் சிக்கி மனீஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சிறுமியின் உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

இதற்கிடையில் அந்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பள்ளி வேன் மீது கற்களை வீசினர். இதில் வேனின் கண்ணாடிகள் நொறுங்கின. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

சிந்துபட்டி போலீசார் விரைந்து சென்று மனீஷா உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் ஒச்சாத்தேவன் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News