செய்திகள்
கிராம மக்களால் தாக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்

பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்- கிராம மக்களிடம் கல்வி அதிகாரி விசாரணை

Published On 2019-09-13 04:10 GMT   |   Update On 2019-09-13 05:06 GMT
நாமக்கல் அருகே பள்ளி ஆசிரியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கிராம மக்களிடம் கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டார். மேலும் ஆசிரியரை தாக்கியதாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சரவணன் (வயது 33) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் பெண் சத்துணவு அமைப்பாளருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இவர்கள் 2 பேரும் பள்ளி கழிவறையில் உல்லாசமாக இருந்து வந்தாகவும் புகார் கூறப்பட்டது. மேலும் பெண் சத்துணவு அமைப்பாளர் பொதுமக்களிடம் வசூலித்த தபால் நிலைய சிறு சேமிப்பு பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளிக்குள் புகுந்த கிராம மக்கள் பெண் சத்துணவு அமைப்பாளரை பற்றி சரவணனிடம் விசாரித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் ஆசிரியர் சரவணனை சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியரை தாக்கியதாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆசிரியர் சரவணனை தாக்கிய சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் உத்தரவின் பேரில் புதுச்சத்திரம் வட்டார கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணன் நேற்று விசாரணை மேற்கொண்டார்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர் மற்றும் கிராம மக்களிடம் அவர் விசாரணை நடத்தினார்.

அப்போது பள்ளி ஆசிரியர் சரவணன் மற்றும் சம்பந்தப்பட்ட பெண் சத்துணவு அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மாட்டோம் என பொதுமக்கள் கூறினார்கள். அதன்படி அவர்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு இன்று 3-வது நாளாக அனுப்பவில்லை.

கல்வி அதிகாரி நடத்திய விசாரணை அறிக்கை மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News