இளம்பிள்ளை பஸ்நிலையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி
காக்காபாளையம்:
சேலம் இளம்பிள்ளையை அடுத்த இ.மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 30). இவர் கடந்த 2009-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ராஜா என்பவரிடம் ரூ.75 ஆயிரம் கடனாக பெற்றார். பின்னர் அதற்கு ஈடாக தனக்கு சொந்தமான 16 சென்ட் நிலத்தை அவருக்கு கிரயம் செய்து கொடுத்தார்.
அப்போது நான் வாங்கிய பணத்தை திருப்பி தரும்போது அந்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று யுவராஜ் கூறி உள்ளார். பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக 75 ஆயிரம் ரூபாயை யுவராஜ், ராஜாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் 6 லட்சம் ரூபாய் தந்தால் தான் நிலத்தை திரும்ப தருவேன் என்று ராஜா கூறியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த யுவராஜ் மற்றும் அவரது தாய் மகேஷ்வரி (50), தந்தை கோவிந்தராஜ் ஆகியோரும் இன்று இளம்பிள்ளை பஸ் நிலையத்தில் வைத்து உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த அந்த பகுதியினர் அவர்களை மீட்டு இளம்பிள்ளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் மண்எண்ணையை உடல் முழுவதும் ஊற்றியதால் ஏற்பட்ட அரிப்பால் யுவராஜ் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.