செய்திகள்
வெடிகுண்டு மிரட்டல்

மதுபோதையில் போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2019-08-26 09:23 GMT   |   Update On 2019-08-26 09:23 GMT
மதுபோதையில் போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் அறந்தாங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். அப்போது போலீசார் அதிகம் உள்ள இடத்தில் வெடிகுண்டு வைப்பேன் என்று கூறினார். மேலும் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து மர்ம நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அவர் ராமாபுரம் பகுதியில் இருந்து பேசி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக வளசரவாக்கம் உதவி கமி‌ஷனர் மகிமைவீரன் மற்றும் ராயலா நகர் இன்ஸ்பெக்டர் தாம்ஸன் ஜார்ஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வெடி குண்டு மிரட்டல் விடுத்த ராமாபுரம் வள்ளூவர் சாலையை சேர்ந்த அன்பு ராஜ் (48) என்பவரை கைது செய்தனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறித்து அன்புராஜ் போலீசாரிடம் கூறியதாவது:-

எனது சொந்த ஊரான அறந்தாங்கியில் உள்ள சொத்துக்களில் சில பிரச்சினைகள் இருந்தது. இதற்காக நான் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு பலமுறை சென்றேன். ஆனால், எந்த வேலையும் நடக்கவில்லை.

இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன். நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தினேன். அப்போது செல்போன் மூலம் போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News