நாகர்கோவிலில் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர்
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வாலிபர் ஒருவர் வந்தார்.
அவர் போலீசாரிடம் நான் இலங்கையை சேர்ந்தவர் எனவும், தமிழகத்தில் நான் பல்வேறு இடங்களில் வேலை பார்த்து உள்ளேன். என்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என கூறினார்.
மேலும் அவர் திடீரென்று ஆபாசமாக பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து வெளியே அனுப்பினர். வெளியே சென்ற அந்த வாலிபர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனைப் பார்த்த போலீசார் அவரை மீட்டு அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவர் மீது தண்ணீரை ஊற்றி கழுவினர். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்த ஜோய் (வயது 30) என்பதும் தெரியவந்தது.
அவர் மீண்டும் போலீசாரிடம் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அழுதபடி கூறினார். இதையடுத்து போலீசார் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் போலீசார் அந்த வாலிபரை நாகர்கோவிலில் உள்ள ஒரு லாட்ஜிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த வாலிபரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு வாலிபர் அவர்களிடம் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கூறி வருகிறார்.
தொடர்ந்து போலீசார் ஜோயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.