விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை
விக்கிரவாண்டி:
விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி போலீஸ் சரகம் வடகுச்சிபாளையத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. விவசாயி. அவரது மனைவி அம்பிகா. இவர்களது மகள் மாலதி. இவருக்கும் மதுரையை சேர்ந்த தனக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது மாலதிக்கு 5 மாத கைக்குழந்தை உள்ளது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு மாலதி வடகுச்சிபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது டிராவல் பையில் துணி மணிகள் மற்றும் 7 பவுன் நகை, ரூ.20ஆயிரம் ரொக்க பணம் வைத்திருந்தார்.
சம்பவத்தன்று இரவு திருநாவுக்கரசு வழக்கம் போல் தனது குடும்பத்தினருடன் தூங்கினார். அப்போது கதவை பூட்டாமல் சாத்தி வைத்திருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டுக்குள் நைசாக புகுந்தனர். பின்னர் மாலதி கொண்டு வந்த டிராவல் பையை தூக்கி சென்றனர். அந்த பையை அருகில் உள்ள தோட்டத்தில் வைத்து திறந்தனர். அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ.20ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு டிராவல் பையை அங்கு வீசிவிட்டு சென்றனர்.
மறுநாள் காலையில் விழித்து பார்த்த மாலதி தனது டிராவல் பை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதோடு அவரது தம்பி கோகுல கிருஷ்ணனின் லேப்-டாப்பும் திருடு போய் இருப்பது தெரியவந்தது.
உடனே தனது தந்தை உதவியுடன் அருகில் உள்ள தோட்டத்தில் பார்த்த போது அங்கு டிராவல் பை கிடந்தது. அதில் துணிமணிகள் மட்டும் இருந்தது. நகை-பணம் இல்லாததால் கதறி அழுதார்.
இதுகுறித்து திருநாவுக்கரசு விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.