செய்திகள்
தற்கொலை செய்த செல்வம்- கொலையுண்ட சுமிதா

வாழப்பாடி அருகே மனைவியை கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்தது ஏன்?- உருக்கமான தகவல்

Published On 2019-08-07 05:14 GMT   |   Update On 2019-08-07 05:14 GMT
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே, குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழப்பாடி:

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செல்வம்( 23). இவரது மனைவி சுமிதா(35). இவர்களுக்கு பிரகதி15), என்ற மகளும், நவதீப்(13) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேரம் சரியில்லை என்று கூறிய செல்வம் குடும்பத்தினருடன் மாமனார் ஊரான கூட்டத்துப்பட்டியில் குடியேறினார். மேலும் செல்வத்திற்கு குடிப்பழக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வம், மனைவியின் தலையில் மண் வெட்டி கணையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சுமிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குழந்தைகள், வீடு உள்பக்கமாக தாழிட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். கதவை திறந்து வீட்டிற்கு சென்ற அக்கம்பக்கத்தினர் கணவன், மனைவி இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வாழப்பாடி டி.எஸ்.பி. சூரியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, செல்வம், சுமிதா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்க அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்த செல்வம் ஆட்டோவை விற்று விட்டு வேறு ஒருவரின் ஆட்டோவை ஓட்டி வந்தார். மேலும் குடிப்பழக்கம் உடைய அவர் பணத்தை வீணாக செலவு செய்ததால் மனைவி கண்டித்ததாகவும், இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தாயும், தந்தையும் இறந்ததால் மகனும், மகளும் கதறி அழுதனர். அவர்களை உறவினர்கள் தேற்றினர். தற்போது 2 பேரும் உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். தந்தையின் ஆத்திரத்தால் தாய் கொலை செய்யப்பட்டதால் 2 பேரும் ஆதரவை இழந்து தவித்து வருவது அந்த பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News