செய்திகள்
முட்புதரில் இருந்து மீட்கபட்ட ஆண் குழந்தை.

விழுப்புரம் அருகே முட்புதரில் ஆண் குழந்தை வீச்சு- போலீசார் விசாரணை

Published On 2019-07-12 09:57 GMT   |   Update On 2019-07-12 09:57 GMT
விழுப்புரம் அருகே இன்று காலை முட்புதரில் வீசப்பட்ட பிறந்து 2 மாதங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், ஜூலை.12-

விழுப்புரம் விராட்டிக் குப்பத்தை அடுத்த கொட்டிப் பாக்கம் வேலி பகுதியில் தனியார் கியாஸ் கம்பெனி ஒன்று உள்ளது. இந்த கியாஸ் கம்பெனி அருகே இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த கியாஸ் கம்பெனி அருகே உள்ள முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின்அழுகுரல் சத்தம் கேட்டது. உடனே அவர்கள் அந்த முட்புதரின் அருகே சென்று பார்த்தனர். அங்கு பிறந்து 2 மாதங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கதறி அழுது கொண்டிருந்தது.

இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் விழுப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு முட்புதரில் கிடந்த ஆண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் அந்த குழந்தையை சமூக நலதுறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளின் விபரத்தை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோத தகராறில் மர்ம மனிதர்கள் யாரேனும் குழந்தையை கடத்தி வந்து முட்புதரில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. * * * முட்புதரில் இருந்து மீட்கபட்ட ஆண் குழந்தை.

Tags:    

Similar News