செய்திகள்
கவர்னரை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. தொண்டர்கள்.

தமிழகம் பற்றி விமர்சனம்- கவர்னர் கிரண்பேடியை கண்டித்து புதுவை அதிமுக ஆர்ப்பாட்டம்

Published On 2019-07-04 11:13 GMT   |   Update On 2019-07-04 11:13 GMT
தமிழகம் பற்றி கருத்து தெரிவித்த கவர்னர் கிரண்பேடியை கண்டித்து புதுவை அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:

சென்னை நகர குடிநீர் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த புதுவை கவர்னர் கிரண்பேடி தமிழக அரசையும், ஆட்சியாளர்களையும், தமிழர்களையும் விமர்சித்து இருந்தார்.

தமிழர்களின் மீதான கிரண்பேடியின் விமர்சனத்திற்கு தமிழகம், புதுவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழக சட்டசபையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

பாராளுமன்றத்திலும் தி.மு.க. சார்பில் இவ்விவகாரத்தை எழுப்பி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநில தி.மு.க. சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த நிலையில் புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக மக்களிடம் கிரண்பேடி மன்னிப்பு கோர வலியுறுத்தியும் இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இதற்காக கவர்னர் மாளிகையில் அருகே தலைமை தபால் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் திரண்டனர். அங்கு கவர்னர் கிரண்பேடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கவர்னரை கண்டித்தும் அவரை திரும்பப்பெற வலியுறுத்தியும், மன்னிப்பு கோர வலியுறுத்தியும் ஆவேசமாக கோ‌ஷம் எழுப்பினர்.

தொடர்ந்து போலீசாரின் தடுப்புகளை மீறி அ.தி.மு.க.வினர் கவர்னர் மாளிகை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
Tags:    

Similar News