செய்திகள்

சங்கராபுரம் அருகே வாகனம் மோதி தாய்-மகன் பலி

Published On 2019-04-09 13:25 GMT   |   Update On 2019-04-09 13:25 GMT
சங்கராபுரம் அருகே பஸ்சுக்கு காத்திருந்த தாய்-மகன் மீது வாகனம் மோதியது. இதில் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சங்கராபுரம்:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மைக்கேல்புரத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர் இவரது மனைவி ஜாக்குலின் (வயது 33).

இவர்களது மகன் மரியசெல்வம் (14). 9-ம் வகுப்பு படித்து வந்தான். தேர்வு முடிந்து விட்டதால் விடுமுறையில் இருந்து வந்தான். ஜான்பீட்டர் தற்போது பெங்களூருவில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தாயும், மகனும் பெங்களூரு சென்று ஜான்பீட்டரை பார்க்க முடிவு செய்தனர். அதன்படி இதைத் தொடர்ந்து அவர்கள் இன்று காலை மைக்கேல்புரம் பஸ் நிலையத்துக்கு வந்து பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜாக்குலின், மரியசெல்வம் ஆகியோர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தாயும்-மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து சங்கராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-மகன் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News