சவுகார்பேட்டை நகை பட்டறையில் 100 பவுன் நகையுடன் தொழிலாளி ஓட்டம்
ராயபுரம்:
சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவர் பழைய நகைகளை உருக்கி புதிய நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.
என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள இவரது நகை பட்டறையில் 10 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்த பாலாஜி (31) என்பவர் 1½ ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் அருகில் உள்ள ஒரு நகை கடையில் கொடுப்பதற்காக இவரிடம் 100 பவுன் புதிய நகைகளை கொடுத்து அனுப்பினார்கள். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை.
நகையை கொடுக்க வேண்டிய கடைக்கும் அந்த ஊழியர் செல்லவில்லை. 100 பவுன் நகையுடன் பாலாஜி தப்பி ஓடியது தெரிய வந்தது.
இதுகுறித்து யானை கவுனி போலீசில் நகை பட்டறை உரிமையாளர் விஜய் ஆனந்த் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து நகையுடன் தப்பி ஓடிய ஊழியர் பாலாஜியை தேடி வருகிறார்.