செய்திகள்

திருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டர் கைது

Published On 2019-03-19 04:22 GMT   |   Update On 2019-03-19 04:22 GMT
திருச்சி அருகே மாமனாரை அடித்துக்கொன்ற புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூர் சின்ன ஆலம்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 52), கூலித்தொழிலாளி. இவரது அண்ணன் முத்து (50).

முத்துவிற்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ராஜகோபால் மற்றும் முத்துவின் வீடு அருகருகே உள்ளது. முத்துவின் மகள் கோகிகலாவை லால்குடி பெருவளநல்லூரைச்சேர்ந்த புரோட்டா மாஸ்டர் சக்திவேல் (32) திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதிக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. எனவே சக்திவேல் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் ராஜகோபால் குடும்பத்திற்கும், முத்து குடும்பத்திற்கும் வீட்டு அருகில் உள்ள தென்னை மரத்தில், தேங்காய் பறிப்பது தொடர்பாக அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் முத்துவின் மகன்கள் வீட்டருகில் உள்ள மரத்தில் தேங்காய் பறித்துள்ளனர்.

அப்போது தேங்காயில் தங்களுக்கும் பங்கு கொடுக்கும்படி ராஜகோபாலின் மகன்கள், முத்து குடும்பத்தினரிடம் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜகோபால் குடும்பத்தினர், முத்துவின் மகன்களை தாக்கியுள்ளனர்.

இது குறித்து இரவில் வீட்டிற்கு வந்த புரோட்டா மாஸ்டர் சக்திவேலிடம் முத்துவின் மகன்கள் புகார் கூறியுள்ளனர். தனது மனைவியின் சகோதார்களை தாக்கியது தொடர்பாக சக்திவேல், சின்ன மாமனார் ராஜகோபாலிடம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் அருகில் இருந்த கல்லை எடுத்து சின்ன மாமனார் ராஜகோபாலை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ராஜகோபால் பரிதாபமாக இறந்தார். இது குறித்து இனாம்குளத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சுப்பையா நேரில் சென்று கொலை செய்யப்பட்ட ராஜகோபால் உடலை கைப்பற்றினார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த பின்னர் ராஜகோபால் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, புரோட்டா மாஸ்டர் சக்தி வேலை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News