செய்திகள்

மரத்தில் இருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் பலி

Published On 2019-03-17 11:41 GMT   |   Update On 2019-03-17 11:41 GMT
சட்டக்கல்லூரி மாணவர் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கக்கன்நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் விக்கிரவாண்டி மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் உதயகுமார் (வயது 19).இவர் புதுவையில் உள்ள அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை உதயகுமார் அவரது நண்பர்களுடன் அந்த பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது மாங்குப்பம் பகுதியில் இருந்த தென்னை மரத்தில் ஏறி உதயகுமார் தேங்காய் பறிக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த உதயகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து, உதயகுமாரின் பெற்றோருக்கும், விக்கிரவாண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்து வந்த போலீசார் உதயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண் டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News