செய்திகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழுவில் கூடுதலாக 11பேர் இணைப்பு- மதுரை ஐகோர்ட்டில் தகவல்

Published On 2019-01-11 10:54 GMT   |   Update On 2019-01-11 10:54 GMT
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கிராம மக்கள் பங்களிப்புடன் நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் விழா குழுவில் கூடுதலாக 11 பேர் இணைக்கப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த கோவிந்த ராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. சுப்ரீம் கோர்ட்டு தடைக்கு எதிராக தமிழக மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்தது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை ஒரு கட்சியை சேர்ந்த குழுவினர் தான் நடத்தி வருகின்றனர்.

2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டர் தலைமையில் கிராம மக்கள் சார்பிலும் இந்த விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு கட்சியை சேர்ந்தவர்களே விழாவை நடத்துவது ஏற்புடையதாகாது. எனவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை கிராம மக்கள் பங்களிப்புடன் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று காலையில் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியில் அனைத்து தரப்பினருக்கும் சமஉரிமை அளிக்கும் வகையில் 24 பேர் கமிட்டி உறுப்பினராக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 11 பேர் என மொத்தம் 35 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முடிவு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். #HCMaduraiBench #Jallikattu
Tags:    

Similar News