கணவனின் கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் அடித்து கொலை
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் காரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் பூஜா (வயது 21).
இவருக்கும், போளூர் பொத்தரை பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் பச்சையப்பன் (25) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பச்சையப்பன் கட்டுமான சாரம் கட்டும் தொழிலாளி. இந்த நிலையில், இவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருங்கி பழகினர். பச்சையப்பனின் கள்ளக்காதல் விவகாரம், மனைவி பூஜாவிற்கு தெரிய வந்தது. தகாத உறவை விடும்படி கணவனை வற்புறுத்தினார். எனினும் கள்ளக்காதலியுடன் பச்சையப்பன் தொடர்பில் இருந்தார். மனைவி மீது வெறுப்படைந்தார்.
இதனால் பச்சைப்பன், பூஜாவின் இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர்.
நள்ளிரவும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலிக்காக வெறிப்பிடித்ததை போல் மாறிய பச்சையப்பன் மனைவியை சரமாரியாக அடித்து உதைத்தார்.
இதில், படுகாயமடைந்த பூஜா வீட்டிற்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அதற்குள், பச்சையப்பன் சம்பவ இடத்தில் இருந்து ஓடி விட்டார். பூஜா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக, போளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, இன்று காலை பூஜாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய பச்சையப்பனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.