செய்திகள்

காதலனால் கர்ப்பம்: திருவாரூர் இளம்பெண் கருவை கலைக்க அதிமுக பிரமுகர் பேரம்?

Published On 2018-10-15 10:26 GMT   |   Update On 2018-10-15 10:26 GMT
திருவாரூர் இளம்பெண்ணின் கருவை கலைக்க அ.தி.மு.க. பிரமுகர் பேரம் பேசியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள வடகரை கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகள் கார்த்திகா (வயது 21). கார்த்திகாவும், சாத்தங்குடி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கோகுல் (26) என்ற வாலிபரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காதலர்கள் நெருங்கி பழகியதால் கார்த்திகா கர்ப்பம் அடைந்தார். தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்த கார்த்திகா, காதலன் கோகுலை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் இதற்கு அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் திருவாரூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மணிகண்டன், கோகுலுக்கு ஆதரவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திகா வீட்டுக்கு மணிகண்டன் சென்று, கோகுல் திருமணம் செய்ய மறுப்பதால் கருவை கலைக்க கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்து விட்டு, கருவை கலைத்த பின்னர் மீதி ரூ.1 லட்சம் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகா , மணிகண்டன் கொடுத்த ரூ.10 ஆயிரம் பணத்துடன் வந்து திருவாரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். தனது வயிற்றில் வளரும் கருவை கலைக்க மணிகண்டன் பேரம் பேசியதாக தெரிவித்தார். மேலும் தனது காதலன் கோகுலனுடன் சேர்த்து வைக்கும்படியும் கூறினார்.

இதனால் கார்த்திகாவின் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் கார்த்திகாவின் காதலன் கோகுல், மற்றும் அ.தி.மு.க. பிரமுகர் மணிகண்டன் ஆகியோரிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. கார்த்திகா, கோகுல் ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தால் தான் உண்மை தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News