அய்யப்ப பக்தர்கள் கண்டன பேரணி - சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு எதிர்ப்பு
முதுகுளத்தூர்:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் கேரளாவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யப்ப பக்தர்கள் சார்பில் பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆன்மீக அமைதி பேரணி நடை பெற்றது.
ஆண்டாள் கோவில் முன்பு தொடங்கிய இந்த பேரணி நான்கு ரத வீதிகளை சுற்றி மீண்டும் ஆண்டாள் கோவில் முன்பு நிறை வடைந்தது.
பெண்கள்-குழந்தைகள் பங்கேற்ற அய்யப்ப பக்தர்கள் பேரணி.
அருப்புக்கோட்டை வட்டார அனைத்து அய்யப்ப பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் பட்டாபிராமர் அய்யப்பன் கோவிலில் இருந்து சரண கோஷ ஊர்வலம் புறப்பட்டனர். சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்க நாதர் கோவிலில் ஊர்வலம் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்கள், பெண்கள், அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தி மன்றத்தினர், பொது மக்கள் சரண கோஷமிட்டபடி சென்றனர்.
முதுகுளத்தூரில் அய்யப்ப பக்தர்கள் குழுவினர் குருநாதர் திருமால் தலைமையில் கண்டன பேரணி நடத்தினர்.
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து காந்தி சிலை, பஜார், பஸ் ஸ்டாண்ட், வடக்கூர், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று மீண்டும் சுப்பிரமணிய சுவாமி கோவில் வரை கண்டன பேரணி சென்றது. #Sabarimala