செய்திகள்

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கியது

Published On 2018-10-14 07:40 GMT   |   Update On 2018-10-14 07:40 GMT
வண்ணாரப்பேட்டை மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கியது. #MetroTrain #ChennaiMetroTrain

சென்னை:

சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

பயணிகள், பொது மக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்கட்ட விரிவாக்கமாக விம்கோநகர் 9 கிலோ மீட்டர் தூர மெட்ரோ ரெயில் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

7 ரெயில் நிலையங்களுடன் இந்த வழித்தட பாதைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் 18 மாதங்களில் நிறைவடைந்து 2020-ல் மெட்ரோ ரெயில் சேவை நடைபெற உள்ளது.

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையே தியாகராய கல்லூரி, கொருக்குப்பேட்டையில் 2 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களும், 5 உயர்மட்ட பாதை ரெயில் நிலையங்களும் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதில் தண்டவாளப் பணிகள், மின்சார பணிகள், கேபிள்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. 9 கிலோ மீட்டர் தூரத்துக்கான இந்த வழித்தட பாதை பணிகள் நிறைவு பெற்றதும் பயணிகள் விம்கோ நகர்- விமான நிலையத்துக்கு அண்ணாசாலை வழியாக 60 நிமிடங்களில் பயணம் செய்யமுடியும். அதேபோல் பயணிகள் சென்ட்ரல் வந்து கோயம்பேடுக்கும் செல்ல முடியும். #MetroTrain #ChennaiMetroTrain

Tags:    

Similar News