கடற்கொள்ளையர் தாக்குதலில் இருந்து மீனவர்களை காக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்த போது கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த நாட்களில் 8 பேர் தாக்கப்பட்டுள்ளார்கள். இப்படி மீனவர்கள் தாக்கப்படுவதும், லட்சக்கணக்கில் நஷ்டம் அடைவதும், கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வதும் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது.
இது வரையில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க தவறிய அரசாக மத்திய மாநில அரசுகள் ஆட்சி செய்கின்றன. எனவே மத்திய மாநில அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் மீனவர்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க, மீனவப் பிரதி நிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.