செய்திகள்
65 வயதான ஜெய்கிருஷ்ணன் - மாணவி மகத்

டியூசனுக்கு வந்த மாணவியை தாரமாக்கி ராமேசுவரத்துக்கு அழைத்து வந்த முன்னாள் தலைமை ஆசிரியர்

Published On 2018-09-26 04:25 GMT   |   Update On 2018-09-26 04:25 GMT
டியூசன் படிக்க வந்த மாணவியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பஞ்சாப்பில் இருந்து ராமேசுவரத்துக்கு கடத்தி வந்துள்ளார். ராமேசுவரம் போலீசார் அவர்களை பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். #FormerHeadMaster #StudentAffair
ராமேசுவரம்:

பஞ்சாப் மாநிலம் அபோகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (வயது 65). பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த மகத் (20) என்ற கல்லூரி மாணவி டியூசன் படித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் திடீரென்று மாயமாகி விட்டனர்.

இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை அங்குள்ள போலீசாரிடம் புகார் செய்தார். அதில், தனது மகளை ஜெய்கிருஷ்ணன் கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தார்.

பஞ்சாப் போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில், இதுதொடர்பாக அனைத்து பகுதிக்கும் தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அவர்கள் ராமேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருப்பது தெரியவந்தது.

ராமேசுவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், வேலம்மாள் ஆகியோர் நடவடிக்கை எடுத்து அவர்கள் இருவரையும் பிடித்தனர். போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பான தகவலை இருவரும் தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

ஜெய்கிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்து விட்டார். அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில்தான் மகத் படித்து வந்துள்ளார். அப்போது, மாணவி மீது பிரியமாக இருப்பதாக கூறி தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் சில உதவிகளை செய்து கொடுத்துள்ளார். மகத் கல்வியில் மிகுந்த அக்கறை இருப்பது போன்று பேசியுள்ளார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியுள்ளார். டியூசனும் எடுத்துள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை.

ஆசிரியர், மாணவி உறவு முறை என்றே நினைத்துக்கொண்டனர். ஆனால் இருவரும் காதல் வயப்படுவதற்கு அந்த ஈர்ப்புதான் காரணமாகி இருக்கிறது. இருவரும் வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்ற தொடங்கினர்.

ஜெய்கிருஷ்ணனுக்கு மாதத்தில் முதல் வாரம் பென்சனாக ரூ.25 ஆயிரம் வருமாம். பணம் வந்ததும் இருவரும் ஜாலியாக வெளியே சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். அதன்படி இந்த மாதம் பணம் கிடைத்ததும் கடந்த 11-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்பியுள்ளனர். முதலில் டெல்லி சென்று சுற்றிப்பார்த்து விட்டு அங்கிருந்து பல இடங்களுக்கு போயுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு ராமேசுவரம் வந்தனர். இருவரும் தந்தை-மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்துள்ளனர். பின்னர் கன்னியாகுமரிக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையே மகளை காணாததால் மகத்தின் தந்தை அங்குள்ள போலீசில் புகார் கொடுத்துள்ளார். செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது ராமேசுவரத்தில் அவர்கள் இருப்பது தெரிய வந்தது. பஞ்சாப் போலீசாரின் தகவலை தொடர்ந்து ராமேசுவரம் போலீசாரிடம் அவர்கள் சிக்கினர்.

இதையடுத்து பஞ்சாப் போலீசார் ராமேசுவரம் வந்தனர். அவர்களுடன் மகத்தின் தந்தையும் வந்திருந்தார். அப்போது, தானும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துவிட்டதாக மாணவி மகத் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரையும் ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு உத்தரவுப்படி இருவரும் பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் பஞ்சாப்புக்கு அழைத்துச்சென்றனர். #FormerHeadMaster #StudentAffair
Tags:    

Similar News