செய்திகள்

ஆத்தூர் பெண்தொழில் அதிபர் மரணத்தில் மர்மம் நீடிப்பு- உறவினர்களிடம் விசாரணை

Published On 2018-09-21 11:07 GMT   |   Update On 2018-09-21 11:07 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பெண் தொழில் அதிபர் மரணத்தில் நீடிக்கும் மர்மம் தொடர்பாக உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட ராணிப்பேட்டை சிவாஜி தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி இந்திராணி (வயது 44).

சண்முகம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானதால் அவர் நடத்தி வந்த மளிகை பொருட்கள் ஏஜென்சியை இந்திராணி நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் இந்திராணி நேற்று வீட்டில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரது உடலை கீழே இறக்கி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சுடுகாட்டில் தகனம் செய்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது இந்திராணியின் பெயரில் சண்முகத்தின் தந்தை ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகளை எழுதி வைத்ததால் சண்முகம் மாயமானதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கரூரில் சண்முகம் பிணமாக மீட்கப்பட்டதும் தெரிய வந்தது.

மேலும் இந்த சொத்து தொடர்பாக இந்திராணியின் மாமியார் சிவகாமியம்மாள் மற்றும் அவரது கணவரின் சகோதரர்களுக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த சொத்து தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் சண்முகம் பிணமாக மீட்கப்பட்டது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் இந்திராணி மற்றும் சிவகாமியம்மாளிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்தி சென்றனர்.

இந்த நிலையில் இந்திராணி வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கியதால் சண்முகத்தை கொலை செய்தவர்கள் யாராவது வந்து அவரை கொலை செய்தார்களா? அல்லது சொத்து பிரச்சனையில் உறவினர்கள் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா? என்று மர்மம் நீடித்து வருகிறது. இது குறித்து இந்திராணியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News