செய்திகள்

நீர்மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

Published On 2018-09-03 07:35 GMT   |   Update On 2018-09-03 07:35 GMT
பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்ததாலும், அதிக வெப்பம் காரணமாகவும் ஏரியில் உள்ள ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. #PoondiLake
ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. பூண்டி ஏரியில் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததாலும், ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர்வரத்து முற்றிலும் நின்று போன தாலும் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது கடந்த ஏப்ரல் முதல் வாரத்துடன் நிறுத்தப்பட்டது.

தற்போது பூண்டி ஏரியில் வெறும் 13 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. சென்னை மெட்ரோ வாட்டருக்கு பேபி கால்வாய் மூலம் 1 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது.

பூண்டி ஏரியில் மீன்வளத் துறை சார்பில் 64 மிதவை வளர்ப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஏரியின் நீர்மட்டம் குறைந்ததாலும், அதிக வெப்பம் காரணமாகவும் ஏரியில் உள்ள ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் ஏரியில் சிறிய வகை மீன்கள் மட்டும் வலையில் சிக்கியதால் அவற்றை மீனவர்கள் கரையோரத்தில் வீசி உள்ளனர்.

இதனால் ஏரிக்கரையிலும் குவியல், குவியலாக மீன்கள் இறந்து கிடக்கின்றன. இறந்த மீன்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் மீன்வளத் துறை உதவி இயக்குனர் வேலன் மற்றும் ஊழியர்கள் பூண்டி ஏரியை பார்வையிட்டனர்.

ஏரியில் இறந்துக் கிடக்கும் மீன்களை உள்ளூர் மீனவர்கள் மூலம் அகற்றி வருகின்றனர். கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழை நீர் ஆகியவை வந்தால் மட்டுமே நீர் இருப்பு அதிகமாகும் என்றும், நீரோட்டம் அதிகமானால் மீன் இறந்துப் போவது குறையும் எனவும் மீன்துறை உதவி இயக்குனர் வேலன் தெரிவித்தார். #PoondiLake

Tags:    

Similar News