செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து சரிவு - 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2018-08-20 05:39 GMT   |   Update On 2018-08-20 05:39 GMT
ஒகேனக்கல்லுக்கு நேற்று 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

மழையினால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த கடந்த 10 நாட்களுக்கு மேலாக 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சத்து 7 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை அந்த அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் நீர் திறப்பு 70 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து நேற்று மாலை 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. மழை குறைந்து அணைக்கு நீரின் அளவும் குறைந்ததால் இன்று காலை நீர்திறப்பு 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி 2 அணைகளில் இருந்தும் 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது.

ஒகேனக்கல்லுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக 1 லட்சத்து 75 ஆயிரம் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. நேற்று 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இன்று 42-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. #Hogenakkal #Cauvery

Tags:    

Similar News