செய்திகள்

திண்டுக்கல் அருகே போதையில் சித்ரவதை செய்த கணவரை கொன்ற மனைவி

Published On 2018-08-11 04:34 GMT   |   Update On 2018-08-11 04:34 GMT
திண்டுக்கல் அருகே போதையில் தினமும் சித்ரவதை செய்த கணவரை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

சின்னாளபட்டி:

திண்டுக்கல் அருகில் உள்ள ஏ.வெள்ளோட்டை சேர்ந்தவர் ஜார்ஜ்குமார் (வயது42). இவர் சிறுமலை அடிவாரத்தில் வேளாங்கன்னிபுரத்தில் தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வருகிறார்.

இவரது மனைவி பாத்திமாகுழந்தை தெரசு (35). இவர்களுக்கு வில்சன் (18), கிளிண்டன் (15) என்ற 2 மகன்கள் உள்ளனர். வில்சன் கல்லூரியில் படித்து வருகிறார். கிளிண்டன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜார்ஜ்குமார் உரிமம் பெற்ற நாட்டு துப்பாக்கி வைத்துள்ளார். கடந்த மாதம் தோட்டத்தில் புகுந்த காட்டு விலங்குகளை துப்பாக்கியால் விரட்ட முயன்றபோது தவறி கீழே விழுந்து குண்டு அவரது உடலில் பாய்ந்தது. இதில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.

ஜார்ஜ்குமார் குடிபழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு மனைவியையும், மகன்களையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார். நேற்று மகன்கள் 2 பேரும் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவிட்ட பிறகு தனியாக இருந்த மனைவியிடம் போதையில் தகராறு செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி ஜார்ஜ்குமாரை கீழே தள்ளி விட்டார். போதையில் அங்கிருந்த ஒரு பாறை மீது அவரது தலை விழுந்து அடிபட்டதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜார்ஜ்குமாரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்ததை அவரது மனைவி ஒத்துக் கொண்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News