செய்திகள்

உயர்த்தப்பட்ட டிக்கெட் கட்டணத்தை பஸ்களில் எழுதி வைக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-07-17 05:58 GMT   |   Update On 2018-07-17 05:58 GMT
உயர்த்தப்பட்ட டிக்கெட் கட்டணத்தை பஸ்களில் எழுதி வைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்தவர் நல்லயம் பெருமாள். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 17.11.2011-ல் பஸ் கட்டணத்தை அரசு மாற்றியமைத்தது.

இதன்படி திண்டுக்கல்- மதுரை இடையேயான கட்டணம் ரூ.18.50ல் இருந்து ரூ.28 ஆகவும், திண்டுக்கல்-தேனி இடையே ரூ.22.50ல் இருந்து ரூ.35 ஆகவும் உயர்த்தப்பட்டது.

ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.3, ரூ.4 வசூலிக்கப்படுகிறது. மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் குறைந்தபட்ச கட்டணம் வசூலிப்பதில்லை.

தமிழகம் முழுவதும் அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட ஒரே மாதிரியான கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த ஆண்டு ஜனவரி 29-ந்தேதி கட்டணம் உயர்த்தப்பட்டதன்படி, கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உயர்த்தப்பட்ட கட்டண விவரங்களை அனைத்து பஸ்களிலும் எழுதியோ, ஸ்டிக்கர் ஒட்டியோ வைத்திருக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.
Tags:    

Similar News