செய்திகள்

நீர் பிடிப்பு பகுதியில் கனமழை- பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பு

Published On 2018-07-11 05:30 GMT   |   Update On 2018-07-11 05:30 GMT
நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் கன மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கூடலூர்:

கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நீர் மட்டம் 122.70 அடியாகவும், நீர் வரத்து 1979 கன அடியாகவும் இருந்தது.

இன்று காலை அணைக்கு நீர் வரத்து 3090 கன அடியாக உள்ளது. நீர் மட்டம் 123.50 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1256 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 3321 மில்லியன் கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 48.23 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 891 கன அடி. தேனி, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காவும், மதுரை குடிநீருக்காகவும் 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 1770 மில்லியன் கன அடியாக உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர் மட்டம் சரிந்து வந்தது. இதனால் முதல் போக பாசனத்துக்காக 120 நாட்கள் தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் விவசாயிகள் ஏக்கத்தில் இருந்தனர்.

தற்போது பெய்து வரும் மழையினால் அணையின் நீர் மட்டம் மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் எள் பயிரிட்டுள்ள விவசாயிகள் சாரல் மழை பெய்து வருவதால் அறுவடை பணி நடந்து வரும் நிலையில் பாதிப்படைந்துள்ளனர். மேலும் விவசாய கூலித் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

பெரியாறு 65, தேக்கடி 43, கூடலூர் 11.6, சண்முகாநதி 7, உத்தமபாளையம் 4.2, வீரபாண்டி 16, வைகை அணை 2.2, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 3, கொடைக்கானல் 5.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News