செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் பதநீர் கொடுக்க வேண்டும்: குமரி அனந்தன் பேச்சு

Published On 2018-01-22 03:56 GMT   |   Update On 2018-01-22 03:56 GMT
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் பதநீர் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தெரிவித்தார்.
கோவை:

கோவையை அடுத்த பேரூர் தமிழ் கல்லூரியில் உலக பனை பொருளாதார மாநாடு நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பனை தொழிலாளர் நலவாரிய முன்னாள் தலைவருமான குமரி அனந்தன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உயரமான பனை மரங்களில் காலையிலும், மாலையிலும் ஏறிக்கொண்டு வரும் பதநீரை அரசு லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 மட்டுமே கொடுத்தது. நான் பனை தொழிலாளர் நலவாரிய தலைவராக செயல்பட்டபோது அதை ரூ.10 ஆக உயர்த்தினேன்.

பதநீர் கண் பார்வையை பாதுகாக்கும். எலும்பிற்கும், நரம்பிற்கும் உறுதி கொடுக்கும். கண்நோயும், காதுநோயும், இதயநோயும் வராமல் பாதுகாக்கும்.

பதநீர் உடலுக்கு நல்லது என்பதால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவோடு பதநீரை கொடுக்கலாம். வள்ளுவர் திருக்குறளை எழுதியதும் பனை ஓலையில்தான். அதற்கு ஏடு என்று பெயர்.

திருமணத்தின்போது பனை ஓலையில் செய்ததைத்தான் மணமகன், மணப்பெண்ணுக்கு மங்கல நாணாக கட்டி தனது மனைவியாக்குவான். எனவே தாலிக்கும், செய்தித்தாளுக்கும் பெயரை கொடுத்தது பனை மரம்தான்.

நான் பயன்படுத்தும் விசிட்டிங் கார்டு, எனது குடும்பத்தில் நடந்த திருமண அழைப்பிதழ்கள் அனைத்தும் பனை ஓலையில் பொறித்தவை. எல்லோரும் இவ்வாறு செய்தால்தான் பனைகளை யாரும் வெட்ட மாட்டார்கள்.

பனையில் ஏற போதுமான ஆள் கிடைக்கவில்லை. அதனால், நான் விடுத்த வேண்டுகோளின்படி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தினர் பனை ஏறும் கருவியை கடந்த 2010-ம் ஆண்டு செய்து கொடுத்தார்கள்.

எனவே பனை மரங்களை வளர்த்து அதனை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Tags:    

Similar News