செய்திகள்
ஒக்கி புயலில் காணாமல்போன மீனவர்களை தேடும் பணி டிசம்பர் 27-ந் தேதியுடன் நிறைவு
ஒக்கி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும் பணி டிசம்பர் 27-ந் தேதியுடன் நிறைவடைந்ததாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை:
பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒக்கி புயல் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி தாக்கியது. டிசம்பர் 3-ந்தேதி நான் தமிழகம் வந்தபோது ஒவ்வொரு மீனவரும் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். ஒவ்வொரு தேடும் கப்பலிலும் மீனவர்களை ஏற்றிக்கொண்டு சென்று தேடினோம். போதுமான அளவிற்கு முயற்சி மேற்கொண்டு விட்டோம்.
கடைசி மீனவரை கண்டுபிக்கும்வரை தேட வேண்டும் என்பது தான் நோக்கம். ஆனால் டிசம்பர் 27-ந் தேதிக்கு முந்தைய 8 நாட்களாக தேடியதில் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடலில் இறந்த மீனவர் உடலையோ, படகையோ காண முடியவில்லை. எனவே டிசம்பர் 27-ந்தேதியுடன் தேடும் பணியை நிறுத்தி விட்டோம்.
எனவே இனி மீனவர்களை கண்டுபிடிக்க எளிதாக படகுகளில் ஜி.பி.எஸ்., டிரான்ஸ்பாண்டர் போன்ற தொழில்நுட்ப கருவிகள் பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews